Sunday, March 11, 2007

நீலக்கடல் -அத்தியாயம் -2

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

Tes pieds sont aussi fins que tes mains, et ta hanche
Est large a faire envie a la plus belle blanche;
A l 'artiste pensif ton corps est doux et cher;
Tes grands yeux de velours sont plus noirs que ta chair.
..................................................................(A une Malabaraise) -Baudelaire


லகவரைபடத்தில் 20.5 ' தெற்கு அட்சரேகைக்கும் 57.33 ' கிழக்குத் தீர்க்கரேகைக்கும் இடையில் அந்த முத்து. கடகரேகையை நெருங்கிக் கிடக்கும் இந்தியப் பெருங்கடலின் அழகு முத்து. நீரிடையே பேசும் நிலத்துண்டு. மும்பையிலிருந்து 4800 கி.மீ. அல்லது பாரீஸிலிருந்து 9426 கி.மீ அல்லது சிட்னியிலிருந்து 9114 கி.மீ பயணத்தில் நம்மை மயக்கும் இயற்கைத் தேவதை.

பத்தாம் நூற்றாண்டில் அராபியர்கள் அம்முத்தைக் கண்டெடுத்து ஆச்சரியத்தில் மூழ்கிச் சூட்டிய பெயர் 'டினா அரோபி (Dina Arobi). கி.பி 1500ல் போர்த்துக்கீசியர்கள் சூட்டிய பெயர் அன்னத் தீவு( Ilha do Cirne). கி.பி 1598ல் டச்சுக்காரர்கள் தங்கள் இளவரசர் நினைவாக 'மொரீஸ் ' எனப் பெயர் வைக்க கி.பி 1715ல் வந்திருந்த பிரெஞ்சுக்காரர்கள் வைத்த பெயரோ பிரெஞ்சுத் தீவு(Ile de France). இந்திய வணிகத்திற்குத் தீவின் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கி.பி 1810ல் பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த தீவினைக் கைப்பற்றி மீண்டும் சூட்டிய பெயர் மொரீஷியஸ்....ஆப்பிரிக்கர், இந்தியர், சீனர், ஐரோப்பியர் சேர்ந்து வாழும் ஒரு பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். இன்றைக்கும் இந்தியப் பெருங்கடலில் எழுந்துநிற்கும் இவ்வுயிர்ப் பிரதேசத்தை ஊட்டிவளர்த்து, கட்டியெழுப்பிக் கரைந்துபோன தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்.. அவர்தம் கைத்திறனில் பிறந்த சாலைகளும், சோலைகளும், கூடங்களும், கோபுரங்களும் அப்புலம்பெயர்ந்த மக்களின் புகழ்பாடுபவை. சொந்தமண்ணைப் பிரிந்து, வந்தமண்ணின் வாழ்க்கையை அங்கீகரித்த அந்த மனிதர்களின் சுகங்கள் அனைத்துமே சோகங்களால் எழுதப்பட்டவை....பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழனின் உதிர இலக்கியம் உயர்ந்தது;
பதினெட்டாம் நூற்றாண்டு......
இந்தியப் பெருங்கடலின் தொப்புளாக அந்தத் தீவு- மொரீஷியஸ் தீவு. சுற்றிலும் மலைத் தொடர்கள், அவற்றைத் தழுவிப் பிரிய மனமில்லாமல் சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்..வடமேற்கில் கடல் - நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இஇஇறங்கிவரும் நிலம் - நெய்தல் நிலம் -. பெயர் போர் லூயி (Port Louis). நீலக்கடல் அலைகளின் நிறுத்தாத நடனம். நட்டுவாங்கமாக கிறீச்சிடும் கடல் நாரைகள், கரையும் நீர்க்காகங்கள். இடைக்கிடையே கரையின் திசையிற் பாய்ந்து மீண்டும், புறப்பட்ட இடத்தினை ஞாபகத்தில் வைத்துத் திரும்புகின்ற அவற்றின் தீராத விளையாட்டு. தெளிந்த கடல் நீரில், தெரிந்த இருட்டு படலம். அவற்றில் வெள்ளியும் தங்கமுமாய் உயிர்பெற்று அலைகின்ற மீன்படலம். வெள்ளியைப் பொடிசெய்து கரையெங்கும் பரப்பியதுபோன்று கடலோர மணல். முடிந்தமட்டும் அவற்றைக் கொள்ளை அடித்துக் கடலிற் சேர்ப்பதில் கவனமாயிருக்கும் அலைகள்.. அலைகளின் பிடியிலிருந்து தப்பித்து மணற் பறித்து முகம் புதைக்கும் இல்லி நண்டுகள், மென்சிவப்புக் கடலோர நண்டுகள். நீரும் காற்றுக் குமிழ்களுமாய் வெடித்து அடங்கும் அவற்றின் சுவாசம். மேற்கே தன் கதிர்களை, அடர்ந்திருந்த வேம்பு, மா, இலவு, வாதுமை, புன்னை, மூங்கில் அடர்ந்த மரங்களுக்கிடையே நிறுத்தித் தன்னை அடையாளப் படுத்தியவாறு வீடு திரும்பிகொண்டிருக்கும் சூரியன். தெளிந்த வானத்தில் திடுமென்று கருத்த மேகம். மலைப்பகுதிகளிலிருந்து எப்போதும் போல சிலுசிலுவென்ற சீதளக் காற்று, இகபர இன்பங்களை செய்தியாகச் சொல்லும் இயற்கையின் மடல்.
அவள் தெய்வானை, இளம் பழுப்புச் சருமம் - கரிய நீண்ட ஒற்றைப் பின்னல். முன் எழுந்த அளவான மூக்கு. மை பூசிய கரிய விழி.. அடர்த்தியான புருவங்கள் - வழுவழுப்பும் நேர்த்தியும் நெருங்கியிருக்கும் கன்னக் கதுப்புகள் - அவற்றில் பருவத்தின் நுண்ணிய மணிகள். ஈரப்பதமின்றி உலர்ந்திருந்த அதரங்கள் விரித்த பவழச் செவ்வாய். யோசித்துப் படைத்திருந்த அளவான நெற்றி. கடலலைகளின் தொடர்த் தழுவலில் கூடுதலாக வெளுத்துப் பூத்திருக்கும் பாதம். .நனைந்த கால்களில் சுழித்துக் கொண்டு பூனை ரோமங்கள். .அவ்வப்போது அலைச்சாரல்களில் நனைந்து நீர் சொட்டும் கூந்தல், மூக்கு, முகவாய், முலைக்காம்புகள். சுதந்திரமாகவிருந்த தோள்களில் வியர்வை உலர்ந்த உப்புத் தேமல்கள். உடலையொட்டிய திருபுவனம் ஈர நூற்சேலை. அழகி- தமிழச்சி...
.
காத்திருக்கிறாள். கடலையொட்டிக் காத்திருக்கிறாள். காத்திருப்பது என்பது கடந்த ஒருமாதமாக அவள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். எப்போது வேண்டுமானாலும் வருவாள். மணிக்கணக்கில், சில நாட்களில் காலையிலிருந்து மாலைவரை காத்திருப்பாள். துறைமுகத்தில் வேலைசெய்துவிட்டுத் திரும்புகின்ற கறுப்பின மக்களுக்கு அவள் காத்திருப்பும், கேள்விகளும் பழகிவிட்டவை. இரவுநேரத்தில் அவர்களது கபான்களில் பாடும் கிறெயோல் பாடல்களிற்கூட அவள் இடம் பெறுகிறாள். அவள் கவனம் முழுவதும் கடற்கரையின் இடது பக்கமிருக்கும் லெ மோர்ன் டெ லா தெக்கூவர்த்து மலையை ஒட்டியே இருக்கும், தீவுக்குள் நுழையும் எந்தக் கப்பலாகவிருந்தாலும், அதன் மூக்கைக்காட்டித் தொடர்ந்து வெளிப்படும் மலை அது.
அவள் அவனுக்காகக் காத்திருக்கவில்லை, தனக்காகக் காத்திருக்கிறாள். அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக்கொண்டிருக்கிறாள். தனியொருவளாக தொப்புட் கொடியைக் கைககளிற் பற்றித் தேடிக் கொண்டிருக்கிறாள். இந்த மண், காற்று, ஆகாயமென அனைத்திலும் நுண்துகள்களாக ஒட்டி, விரட்ட விரட்ட, எழுந்து மீண்டும் படிந்து தன் வேரினைத்தேடிக் களைத்துப் போகிறாள். காலடியிற் கடலலைகள், திருமுடியிற் கதிரவனின் கதிர்களெனத் திரும்புகின்ற பக்கமெல்லாம் மலைத்தொடர்களின் மெளன ஓங்காரம். அவ்வோங்கார ஓசையின் நாதமாக, அலைகளூடே பயணித்து மீள்கிறாள். மலைமுலைகளை மறைத்து அழகூட்டும் மஸ்லின் மேகங்கள், அவற்றைத் தழுவும் மரகதப் பசுமையிற் கச்சைகள். கச்சையைக் கண்களால் உரிந்து, காதற்தாபத்துடன்கூடி, கழிவுகளிற் தன் முகம் தேடுகிறாள். மலைகளின் சிகரங்களில், ஊற்றெடுத்து உருண்டுவிழும் நீரருவிகளில் நீந்திக்களைத்து அதன் சங்கமச் சேற்றில் மிதக்கும் பவழப்படிமங்களில் தேடுகிறாள். சிவப்புப் புல்புல் -பச்சைக் கிளிகள்-புள்ளிகளிட்ட புறாக்கள்- துள்ளிப் பறக்கும் மைனாக்கள். அவற்றின் இதயத்தை வருடும் இயற்யைின் ஒட்டுமொத்த நாதவோசை.- முடிவற்ற சங்கீதம். அந்திநேர சுரங்களுக்காகவே காத்திருந்து, வானவில் இழைத்த வண்ணத்தடத்தில் மெல்லடிவைத்து பயணிக்கிறாள். என்றேனும் ஒருநாள் இந்தியப்பெருங்கடலில் அவன் முகம் காட்டக்கூடும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறாள். கண்ணுக்கெட்டிய வானமும், கடலும் மென்மையான நீலத்தில் உறவு கொண்டாட, கண்ணுக்கெட்டா வானமும் கடலும் அடர்ந்த நீலத்தில் அமைதியாகக் கிடந்தது. அந்த அமைதிக்குப் பின்னேதான் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியும் காத்திருப்பும் கடந்த சிலநாட்களாக அவளது வாழ்க்கையாகிவிட்டது. போர் லூயி துறைமுகத்திலிருந்து இந்தியத் தீபகற்ப திசை நோக்கிப் பயணிக்கவிருக்கும் பிரெஞ்சு கிழக்கிந்தியகம்பெனியின் வணிகக் கப்பல்களில் ஏதாவதொன்றில் தொற்றிக்கொண்டு, அவனைத் தேடி ஓடலாம் என்கின்ற உந்துதலுங்கூட அவளிடம் இப்போது குறைந்து சோர்ந்திருக்கிறது. என்றாவது மீளுவான் என்கின்ற நம்பிக்கையில் வழக்கம்போல நீண்ட ஆழமான பெருமூச்சு. கண்களை மெல்ல மூடி அவன் சம்பந்தப்பட்ட நினைவுத் தோணியில் ஆனந்தமாகப் பயணித்தாள்......
'தெய்வானை.. தெய்வானை.. ' அழைப்பது பெர்னார் போலவிருந்தது. நினைவைக் கலைத்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பியபொழுது முழங்காற் சாராயும் ஓலைத் தொப்பியுமாக கைலாசம் நின்றுகொண்டிருந்தான். இ
' ம் ' புறப்படு தெய்வானை, அம்மா உனக்காகக் காலையிலிருந்து காத்திருக்கிறாங்க...
'இல்லை அண்ணா. நீங்கள் போங்கள் அவர் எப்படியும் வந்திடுவார். அவரில்லாமல் திரும்ப மாட்டேன். '
'கப்பல் புதுச்சேரியையே அடைந்ததோ என்னவோ ? அதற்குள் நாமுள்ள தீவுக்கு மீண்டும் எதிர்பார்க்கிறாய். நம்புகின்ற வகையிற் செயல்படு. வானம்வேறு இருண்டுகொண்டு வருகிறது. மழையும் காற்றும் வருவதற்கான அறிகுறி. உடனே கிளம்பு ' மறுத்த தெய்வானை என்ன நினைத்தாளோ, சகோதரனின் வலதுகரத்தை அன்பாகப் பற்றினான்.
அவன் கூறி முடிக்கவில்லை. தெற்கே மரங்களுக்கிடையில் நீண்டு உடைந்து அடுத்தடுத்து எழுந்து மறைந்தன ஒளிக் கீற்றுகளாய் மின்னல்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சில விநாடிகளில் இடியுடன் கூடிய மழை சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. இருவருமே ஓடினர். தங்கையின் உடற்பலவீனத்தைப் புரிந்து மெதுவாகவே ஓடினான் சரிவுகளில் சற்று வேகமாகவும், சம நிலங்களில் நிதானமாகவும், செங்குத்தான பகுதிகளில் சிரமத்துடனும் கடக்கவேண்டியிருந்தது. மழையின் வேகம் கூடியிருந்தது. கடல் அலைகள் உயர்ந்து உடைந்தன. மரங்கள், குறிப்பாக தென்னைகள் வைளைந்து, தென்னையோலைகள் கழுத்தைவிட்டு உயர்ந்த கேசம்போலக் காற்றில் உயர்ந்து மீண்டும் திரும்பின..
தெய்வானை, 'எங்கேயாவது நின்றுபோகலாமே ' என்கின்ற தன் எண்ணத்தைச் சகோதரனிடம் வெளியிட்டாள்.
'அண்ணா என்னால் தொடர்ந்து ஓட முடியாது. கொஞ்சம் காத்திருப்போம் மழை விடட்டும். ' அங்கே தென்னை மரங்கள் வரிசையாக இருக்கின்றனவே. அங்கே சென்று நிற்கலாமா ? '
' வேண்டாம் அங்கே வேண்டாம். இந்த நேரத்தில் அவற்றின் காய்களோ, மட்டைகளோ தலையில் விழலாம். அதோ வாதுமை மரங்கள் நிற்கின்றன பார். அங்கே வேண்டுமென்றால் போகலாம் '
இருவரும் அருகே தெரிந்த வாதுமை மரங்களின் அடியில் போய் நின்றார்கள்; பக்கத்திலே, எங்கேயோ இடிவிழுந்து மூங்கிற் காடுகள் சட சடவெனப் பற்றி எறிவதும் அவற்றுக்கிடையேயிருந்து தப்பும் விலங்குகளின் அபயக் குரல்களும் அடை மழையின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டுக் கேட்கின்றன. மழையில் நனைந்திருந்த இருவரது உடல்களும் தேவையின்றி நடுங்கின..
'கிழக்கே பார். அடிவானம் கூடுதலாகக் கறுத்துக் கொண்டு வருகிறது. காற்றின் வேகம் குறையவில்லை. முந்தைக்கு இப்போது அதிகமாகவிருக்கிறது.. அநேகமாகப் புயல்கூட வீசலாம். ' கைலாசம் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு, தங்கையின் இடதுகையை ஆறுதலாகத் தனது இடது கரத்தில் வசப்படுத்திக் கொண்டு பேசினான்.
'பறங்கியர்களுக்குப் பிரச்சினையில்லை. நம்மவர்களுக்கும், கறுப்பர்களுக்கும்ந்தான் பிரச்சினை. நம்முடைய தேசத்து விழல் வேய்ந்த குடிசைகளே பரவாயில்லை. இலைகளையும் தழைகளையுமிட்ட கபான்களில் எத்தனை நாைளைக்கு இப்படி வாழ்க்கையை ஓட்டுவது ? எப்படியாவது கவர்னர் சமூகம் சென்று நாம் விண்ணப்பிக்கலாம். மீண்டும் புதுச்சேரிக்கே திரும்பவேண்டும் அண்ணா. அது முடியுமா ?. நமக்காக பயணம் மேற்கொண்டுள்ள பெர்னாரிடமிருந்து தகவல்கள்பெற எவ்வளவு நாட்கள் ஆகுமோ ? எனக்குப் பயமாக இருக்கிரது அண்ணா '
' புதுச்சேரிக்குத் திரும்புவது சுலபத்தில் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையென அம்மா அடிக்கடி நம்மிடம் சொல்வாறே ? மறந்துவிட்டாயா ? பெர்னார் மீது எனக்கு அளவுகடந்த நம்பிக்கை இருக்கிறது. உரிய தகவல்களோடு தீவுக்குக் கூவருவார். காத்திருப்போம். அம்மா தினந்தோறும் வணங்கும் சர்வேஸ்வரன், புதுவை வேதபுரீஸ்வரர் தயவு வேண்டும். எனக்கும் நம்முடைய மண்ணை மீண்டும் மிதிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சரி புறப்படு. மழை கொஞ்சம் விட்டிருக்கிறது. '
இருவரும் வடகிழக்காகச் சென்ற செங்குத்தான பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.
' என் பின்னே வா. விஷமுட்கள் நிறைய இருக்கின்றன '
அண்ணன் கைலாசத்தின் வார்த்தைகளை ஏற்று, தெய்வானை பின்தொடர்ந்தாள். கைலாசம் வேகமாக நடக்கப் பழகியவன். அவள் அப்படியல்ல. சிறிது தூரம் நடந்திருப்பார்கள்.
'அம்மா ' வலது காற்பாதத்தினைத் தூக்கியவாறு ஒற்றைக் காலில் நிற்க முயற்சிசெய்தவளை ஓடிச்சென்று தாங்கிக் கொண்டான். அவன் தோள்களை அழுந்தப்பற்றிக் கொண்டு வலதுகால் பாதத்தை முடிந்தமட்டும் திருப்ப முயன்றாள். குதிகாலில் முள்தைத்தவிடத்தில் நீலம் பாரித்திருந்தது. தனது ஆட்காட்டி விரலால் மெதுவாகத் தடவினான். முள் இருப்பதன் அடையாளமாக நெருடியது. வரிசையாக நின்றிருந்த தென்னைமரங்களின் திசைக்குச் சென்று, கீழே கிடந்த ஒரு தென்னை ஓலையிலிருந்து ஈர்க்கினை எடுத்து இரண்டாக உடைத்து அவளது பாதத்தில் முள் தைத்தவிடத்தில் மடித்துப் பொருத்தி, முள்ளைப் பிடுங்கி எறிந்தான். இரத்தம் முத்தாக எட்டிப் பார்த்து யோசித்துப் பின்னர் கசியத் தொடங்கியது. அருகிலிருந்த புதர்களிலிருந்து நாயுருவியைக் கொண்டுவந்து கசக்கி அதன் சாற்றினை முள்தைத்தவிடத்தில் விட்டு இலைகளாற் சூடுபறக்கத் தேய்த்தான். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அண்ணனின் சிசுருட்ஷைகளை ஏற்றுக் கொண்டாள். 'கொஞ்ச நேரம் இவ்வலி நீடிக்கும். பிறகு சரியாகிவிடும் ' என்ற. கைலாசத்தின் ஆறுதல் வார்த்தைகளையேற்று அவன் முன்னே நடக்க இவள்
வலதுகாலைப் பிடித்தவாறு நிதானித்து நடந்தாள்.
குறைந்தது இன்னும் இரண்டு கல் தூரமாகினும் அடர்ந்த மரங்களுக்கிடையே நடந்தாக வேண்டும். மழை இப்போது முற்றிலுமாக குறைந்திருந்தது. வானம் நீலப்படிகமாக எப்போதும்போலத் தெளிவான நிலைக்கு மீண்டிருந்தது. மரங்களின் கிளை மற்றும் இலைகளிலிருந்து மழைத்துளிகள் சீராகச் சருகுகளில் சொட்டிக்கொண்டிருந்தன. நிலம் சிலவிடங்களில் நீர்த்தாரைகளுக்கு வழிவிட்டு இறுகிக்கிடந்தது.
சிற்றோடைகளாகவும் மெல்லிய அருவியாகவும் ஆங்காங்கே மழைநீர்கள் அவதாரமெடுத்திருந்தன. அவ்வோடைகளில் நீர்தவழ்ந்து நிலத்தை அரித்து எழுந்த இடங்களில் சிறிய கெண்டைமீன்கள். கூடுதலாக நீர்தேங்கியிருந்த சிலவிடங்களில் பச்சைத் தவளைகள், மண்டூகங்களின் கர்ண கடூரமான சப்தம் . இரை கிடைத்த ஆர்வத்தில் அவற்றை நோக்கி ஊர்ந்துவரும் பாம்புகள். இடையிடையே பொன்வண்டுகளின் ரீங்காரம். பழகிய தடமென்றாலும் தெய்வானைக்குள் பயம் புகுந்துகொண்டது.
' அண்ணா சற்று வேகமாகப் போ. இருள் கவிழ்வதற்குள் காட்டைக் கடந்துவிடவேண்டும். எனக்கு மிகவும் அச்சமாகவுள்ளது. '
' பயம் வேண்டாம். 'நீண்ட மலையின் '(Montagne Longue) வடக்கு திசையின் அடிவாரத்திலேதானிருக்கிறோம். இன்னும் சிறிதுதூரந்தான். '
புதுவெள்ளக் களிப்பில் தூரத்தில் துள்ளிப்பாயும் 'கல்பாஸ் நதியின் '(River des Calebasses) ஆரவார ஓசையைக் காதில் வாங்கியவாறு இருவரும் அத்திசைநோக்கி நடக்கவாரம்பித்தார்கள். சகோதரன் வார்த்தைகள் அவளுக்கு நம்பிக்கையூட்டியிருக்கவேண்டும். பயத்தினை உதறிவிட்டு, அவன் பின்னே நடக்கவாரம்பித்தாள். கதிரவன், நாளைமுடித்ததன் அடையாளமாக மேற்கில்தெரிந்த மலைகளின் பின்னே கதவடைத்துக் கொண்டிருந்தான். கடிக்கும் அட்டைகளையும் தெள்ளுப்பூச்சிகளையும் ஒதுக்கிவிட்டுத் தாழ்ந்த கிளைகளின் மோதல்களிற் தப்புவித்து, அபாந்தொன்னே (River l 'abondonnais) ஆற்றினையொட்டியிருந்த சமதளத்தை இருவரும் அடைந்திருந்தார்கள்.
ஒழுங்கற்ற சாலைகளில், காளான்களென இந்தியத் தமிழர்களுக்கெனவும், மலபார் மக்களுக்கெனவும் உருவாக்கப்பட்டிருந்த கபான்கள் எனப்படும் குடியிருப்புகள். மரப்பலகைகளால் உருவாக்கபட்டு கூரைகளில் இலை, தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்களின் கூடுகள். கூரைகளிருந்து வரும் அரிசிச்சோறும், குழம்பின் மணமும் இவர்களின் நாசியை மட்டுமல்ல மனத்திற்கும் சந்தோஷத்தைக் கொண்டுவந்திருந்தது.
தங்கள் குடியிருப்பைக் கண்ட ஆனந்தத்தில் ஓட்டமும் நடையுமாக விரைந்துவந்தார்கள். கதவு திறந்திருந்தது. வீட்டிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் இறைந்து கிட,ந்தன. இவர்களின் அன்னை காமாட்சி மூர்ச்சையாகிக் கிடந்தாள். அவள் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.


தொடரும்.....

No comments: