Wednesday, June 27, 2007

<>தேவமைந்தன்<>

புதுச்சேரி வட்டாரம்-

வரலாறு சார்ந்த நாவல்கள்:

'நீலக்கடல்' குறிப்பாக...

-தேவமைந்தன்.


( தேவமைந்தன் ஒரு குறிப்பு:-
தேவமைந்தனின் இயற்பெயர் அ. பசுபதி. 11-03-1948ல் கோவையில் பிறந்த இவர், இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து தன் 52-ஆம் அகவையில் விருப்ப ஓய்வு பெற்றவர்.


1968ஆம் ஆண்டு முதல் தேவமைந்தன் படைத்த கவிதைகள், 'உங்கள் தெருவில் ஒரு பாடகன்'(1976) 'புல்வெளி'(1980) 'போன்சாய் மனிதர்கள்'(1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன.
1969 முதல் வானொலி உரைகள் நிகழ்த்தி வருபவர். 'செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகி வருகிறது.


புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் தேவமைந்தன் ஆற்றிய உரை, கீற்று.காம்-இல் பதிவேற்றப்பட்டுள்ளது. திண்ணை.காம்-ல் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின் கவிதைப் பக்கங்கள் மரத்தடி.காம், புதுச்சேரி.காம், வார்ப்பு.காம், கவிகள்.தமிழ்.நெட், கீற்று.காம் ஆகிய வலையேடுகளில் உள்ளன.


http://kalapathy.blogspot.com,
http://360.yahoo.com/pasu2tamil,
http://httpdevamaindhan.blogspot.com ஆகிய வலைப்பூக்கள் இவருடையவை.)


1673 ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள்
இந்தியாவில் முதன் முதலாகக் காலூன்றத்
தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி.
காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும்
உள்ளடங்கியது இந்த மாநிலம்.

முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த
சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில்
மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது.

காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ
தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின்
பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார்
கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல்
பகுதியில் கேரளத்தின் தலைச் சேரிக்கு ஏழு
கி.மீ. அருகில் உள்ளது.

ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத்
தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின்
அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே
ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா
உள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட
மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள
விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக்
கடலை ஒட்டியும் உள்ளன.

1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக்

கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத்
தொடங்கியது.

1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த
பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு
ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால்
கையகப்படுத்தப் பட்டன.

1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ்
அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர்
வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே
ஒப்படைக்கப் பெற்றன.

இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத்

தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த
புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல்
விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

இதையே 'இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto

settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத்
தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய
பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது.

விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் 'நடைமுறை

அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்' (De-jure transfer) இந்தியப்
பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்
டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக
ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஏழாவது

திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின்
ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில்
மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்களவைக்கு
ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை
புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது.

மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான

வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர்
முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் 'புதுவை
வரலாறும் பண்பாடும்' 'தமிழகம் புதுவை வரலாறும்
பண்பாடும்' போன்ற நூல்களில் விரிவாக அறிந்து
கொள்ளலாம்.

ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதி

குறிப்பு முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பல
வற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை
அந்த நூல்கள்.

இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில்,

கடந்த 1910களில் 'புதுவைக் கலைமகள்' என்ற 'மாத
சஞ்சிகை' நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில்
வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி,
வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள
தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள்
நடத்தப்பட்டு வந்தன.

1916ஆம் ஆண்டில், 'புதுவைக் கலைமக'ளில், அதன்

ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், 'ரமணி' என்ற
நாவலைக் கண்டித்து எழுதினார்:
அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு

'குணாகுணவாராய்ச்சி'' (புதுவைக் கலைமகள்--
[1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும்.

சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் 'ரமணி'

போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு
முரண்போக்கில் போயின என்பதை
அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள்

மாறுவேடம் போட்டு விட்டால் போதும்..
ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப்
பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல்
போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள்
குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார்.

"உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா

சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின்
நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச
நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள
கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்"
என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம்

எழுதினார்.

இந்த அடிப்படையிலேயே - தன் எதிர்பார்ப்பை

மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில்
நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும்
என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா!

நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்'

நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலான
வற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு 'Les Tamouls A L'lle
Maurice - Ramoo Sooria Moorthy,' 'Les Indienes A L'lle de France,
' 'A Lougnon - (Correspondance du Conseil Superieur de Boubob
et de la Compagne des Indes)' முதலான பற்பல நேரடி
ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.

புதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார

வழக்குச் சொற்கள் நிரம்பிய 'ஆண்களும் பெண்களும்'
(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார்.

பிரான்சுக்குப் போய்வரும் தமிழர்களைக் குறித்தும்

பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப்
பட்டிருக்கிறார் பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு
'பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்' என்று புதுச்சேரியைப்
பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப்
பார்த்திருக்கிறார்.

"என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன

பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப்
பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச்
சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்
புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக்
கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில
பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி
பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை.

மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச்

பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்
கின்றன என்பது மெய்தான்!" என்று பிரபஞ்சன்
மொழிவது 'எழுத்தாளர் தர்ம'த்துக்கு ஏற்றதே.

(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து 'வைகறை' என்ற
ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய
பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய
'எழுத்தாளர் தர்மம்' என்ற சிறந்த புத்தகம்,
இங்கே நினைவுகூரத் தக்கது)

"எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத்

தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக்
கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம்
பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி
பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு
வந்து சேர்த்தார்கள்?

தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது

பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி
அமைத்து விடவில்லை. உன்னதமான பிரான்சின்
கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான
வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி,
எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை"
என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.

இருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள

நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கட'ல்
(திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம்
தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு
[தெமி 1x8] பக்கங்கள் நிரம்பிய நாவல் -

முன்னுரைகள் நீங்கலாக...) அந்தப் போலி
வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்தி
லெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பொழுது, திண்ணை.காம்-இல் தொடராக

வெளிவரும் 'மாத்தா ஹரி'' இன்றும்
புதுச்சேரியில் நீடிக்கும் அந்த 'சொல்தா
வாழ்க்கை'யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச்
சித்திரிக்கின்றன.

சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப்
பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர்
மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச்
சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316)





பிரபஞ்சனின் 'மகாநதி'' (1990) இரண்டு தலைமுறைகளைப்
பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச்
சார்ந்தது ஒன்று. புதுச்சேரி - விடுதலைப் போராட்டத்தி
லிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது.
கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன்,
தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின்
கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல்.

பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல்

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல்.
இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743
வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம்.

குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ
கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை,
அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன.

தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப்
போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு.
அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை - என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று
உருவானது. அவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு
விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர்.

மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன்
குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி
ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம்
செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே.

தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான
வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக்
காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன.

பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' என்ற நாவல் 'மானுடம்
வெல்லும்' என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி
வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை,
மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல
விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி,
குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ்,
பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி
வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில்
வருகின்றனர். அளவிலும் பெரியது இது.

இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன்.

(மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி)
'வானம் வசப்படும்,' ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது.


இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு - சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே
(மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும்
நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, "மசூதியை இடிக்க வேண்டாம்!"
என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(வானம் வசப்படும், பக்.659-668) தவிர, அப்துல் ரகுமான் சாதித்ததை, "துலுக்கர்தமை, தமிழருக்கு வேறாகப் பிரித்துப் பேசியும் எழுதியும் இருக்கிற"(மேற்படி, ப.681-அடிக்குறிப்பு) ஆனந்தரங்கப்பிள்ளை
சாதிக்க முடியாமல் மதாம் ழானுக்கும் குவர்னர் துய்ப்ளெக்
ஸுக்கும் ஒத்துப்போன வயணமெல்லாம் அடுத்து வரும்
பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(ப.669+)
தினமணி கதிரில் தொடர்ந்து வெளியான 'நேசம் மறக்கவில்லை நெஞ்சம்' நாவல், புதுச்சேரியில் விடுதலைக்குப் பின் நிலவி

வருகின்ற சொல்தா வாழ்க்கையில், ஓர் எளிய பெண்ணைப் பிரஞ்சுக்குடியுரிமை பெற்ற இளைஞன் ஒருவன் மெய்யாகவே காதலித்த பின்பும் அவளுக்கு நிகழும் அவலத்தைக் காட்டுவது.

இதைத் தொடராக வரும்பொழுது வாசித்தேன். தொடராக
வரும்பொழுது நாவலொன்றை வாசிப்பதில் நினைவுத்
தொடர்ச்சி சற்றேனும் அற்றுப் போகாமலிராது அல்லவா?
புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன்

ஆவார்.

1987இல் 'வாழ்க்கை ஒரு விசாரணை' நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர்.

எவருக்கும் அஞ்சாதவருங்கூட. "நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்?" என்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன.

பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் 'சிதறல்கள்(1990)' நாவலில் காணமுடியும். சென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது.

பாவண்ணனின் 'ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),'

மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும்.

பாவண்ணன் படைத்த 'இது வாழ்க்கை அல்ல(1988)' என்ற
நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும்
திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்
பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும்
உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா?

ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள்.
புதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் 'நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14)


"ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால்
வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட
பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான
குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள்
(இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்" என்று சொல்லும் பிரபஞ்சன்('உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்': நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி 'நீலக்கட'லில் ஐக்கியமாகின்றன.

பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம்

நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது

'நீலக்கடல்.' பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து 'டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் 'அன்னத் தீவு' என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் 'மொரீஸ்' என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் 'பிரஞ்சுத் தீவு' என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். ("பெயரில் என்ன இருக்கிறது!" என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.)

ஆம். "பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது."(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம்.

தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே.
ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான்
'கருமாறி 'ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள்.

தாந்திரிக நிலையில் "வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி"(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் - கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் - தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் 'கருமாறிப் பாய்வ'தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல - தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) 'நீலக்கடல்' நாவலில்தான் பார்க்க முடிகிறது.

சரி. 'நீலக்கட'லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். "சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் - நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் - நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis - லூயி துறைமுகம்). கடல் - தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.)

பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் -
தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவி
களிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது.

யாருக்காகக் காத்திருக்கிறாள்? பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். "தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்."(பக்.31-32) தன் வேரினைத் தேடிக்
களைத்துப் போனவள் அவள் மட்டுமா? காலையிலிருந்து
மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு
நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும்
கபான்கள் எனப்படும் - மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு
கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள்
என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள்
தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை
தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான்.

"கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்),
புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?"(ப.13)
என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம்
தருகிறார் நாவலாசிரியர்.
ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய "புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது" என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது.

(மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6: புதுச்சேரி. qu.in 'மனோரமா இயர்புக்')
'நீலக்கடல்' குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது.

இதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). 'உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.' அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார்.

புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை 'The Serpent Of Paradise' என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார்.

நீட்ஷே, "சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்?" என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். 'தாந்திரிக மைதுனம்' என்ற சடங்கைப் பற்றி
(Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92)
அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது - 'நீலக்கட'லில் அலை - 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான்.
" The Tantric is forbidden to practice love passionately or compulsively.
This is a rule permitted only to the woman, since she is the active participant
and because she represents the feminine aspect of the universe and the
creative side of Siva himself. She is Shakti or Kundalini"(op.cit.p.91)
என்பது செர்ரனோவின் பதிவு.

வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது.
'நீலக்கட'லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் 'சொர்க்கத்தின் சர்ப்ப'த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. 'நீலக்கட'லில் அமானுஷ்யமானதாக வருவது, 'சொர்க்கத்தின் சர்ப்பத்'தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

'நீலக்கடல்' நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் "பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு... மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்" என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார்
குளோதன் - தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது.

ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் - தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவு இல்லம் ஆகிய 'காஞ்சி மனை'யில், அதன் நிர்வாகி'யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது.

பின்தொடரும் 'அடங்கல்' - மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான 'தினா' புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. 'உயிர்ச்சேதம்' பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது மறைமெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520)

"பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது"(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும்.

இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி - கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் 'பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி''யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் - சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108)

நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. "நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக"(ப.519) என்பது ஒரு சான்று.

உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல.

செயல்பாடுகளால்.

பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!" என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா?"

அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) 'உளவியலுக்கான சார்பியல்' (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். 'The World According To Garp' என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது.

மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. "தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன்
பணி செய்து கிடப்பதே." இதில் 'தன்' என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது? இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது... 'நீலக்கடல்' நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், 'தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன? "எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்"(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு?

இல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா? எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக(அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் 'சாமர்த்தியம்.' எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார்.

'நீலக்கட'லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் 'சொஸ்த லிகித'மான 'தினசரிப்படி சேதிக் குறிப்'பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் 'Narrative' என்பதை மனத்துள் கொண்டு 'நவிலல்' என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். 'நீலக்கட'லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் "இந்தப்படிக்குப் படித்துப்போட" முடியாது.

இலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus...pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற 'Ars Poetica' என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் 'Purple Patch' என்பது. "It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose -- especially a descriptive passage -- stand out from its context"(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று 'நீலக்கட'லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள்.

'நீலக்கட'லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் "நண்பனே!" என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் - கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் - கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி
அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய
தலைமுறை புரிந்து கொள்ளாது.

புதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்! கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.

("ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க?").. "மிசியே! போன்சூருங்க!" என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; "முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு'ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு'ருக்காதே.. இன்னா! கண்டுபுடிச்சிக்கினியா?" (காரைக்காலில் "என்ன புள்ளா!"வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், "தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி!" என்றும் தமிழோசையை "நாங்க படிச்சாச்சு..நீங்க..?" என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

பிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று.

உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):
கிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 - 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083. முதற் பதிப்பு. 2005.


சண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது 'E' குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் - 560 038. முதற் பதிப்பு. 1991.

சாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை - 600 041. ஏழாம் பதிப்பு. 1971.

சுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977.

தில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605 008.

பிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை - 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990)

பிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை - 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993)

பிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.

Abrams, M.H., A Glossary of Literary Terms, Seventh Edition 2001.
Harcourt India Pvt. Ltd. New Delhi. First Published by Harcourt, Inc. 1999.

Serrano, Miguel., The Serpent Of Paradise(The Story of an Indian Pilgrimage),
Translated by Prank MacShane. Bell Books - Vikas Publishing house Pvt Ltd., Delhi 110006. 5 Daryaganj, Ansari Road,1975.
First published in 1974 by Routledge and Kegan Paul Ltd.,London.

நன்றி: 'நீலக்கடல்' நாவலை என் மறுவாசிப்புக்கும் உரத்த வாசிப்புக்கும் உட்படுத்திய புதுச்சேரி எழுத்தாளர் ப.ரா.கலாவதிக்கு.

Saturday, March 31, 2007

<> இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவல்<>

நீலக்கடல் - நூலாய்வு.

மலேசிய எழுத்தாளர்
முனைவர்.ரெ.கார்த்திகேசு.

(முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசியா,
பினாங்கு நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல்
பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்
துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.
மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள்
அலுவலர். தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் மலேசியாவிலும் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்,
இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள்
பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச்
சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர் இவர்!)

2005 இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை.

தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சில புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில் தந்துள்ளார்.

அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.
2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார்.

முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையானபெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.

ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.

பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார்.

மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.
******

Sunday, March 11, 2007

<>நீலக்கடலுக்கு தமிழக அரசின் பரிசு<>


நீலக்கடல்' நாவலுக்கு

தமிழக அரசின் பரிசு

நாகரத்தினம் கிருஷ்ணா






எனது நீலக்கடல் புதினம், தமிழக அரசின் (வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளில்)

சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றிருக்கிறது. இந்த

நேரத்தில் அந்த நாவலுக்கான முன்னுரையில் நான் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
" இப்படைப்பின் வெற்றிக்கு, மூவர் முக்கிய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.

1. திண்ணை இதழும், ஆசிரியர் குழுவும்: இப்படைப்பைத் தொடராக திண்ணை இணைய இதழில் எழுதுவதற்கு நான் விருப்பம் தெரிவித்தபோது, மனமுவந்து ஏற்றார்கள். முழுச்சுதந்திரத்தோடு என் எழுத்தைப் பதிவு செய்ய இறுதி அத்தியாயம்வரை அனுமதித்தார்கள். நீலக்கடல் பேசப்படுமானால், திண்ணை இணைய இதழின் அணைப்பும் ஆதரவும் பேசப்படவேண்டும்.

2. இடைக்கிடை எனக்கு உற்சாகமளித்த மின்னஞ்சல்கள்

3. என் படைப்புகளில் முதல்வாசகரும், எழுத்துப் பிழைகளை கூடியவரை குறைக்க உதவிய எனது இலங்கை நண்பர் மரியதாஸ், எனது அலுவற்பணிகளைக் குறைத்து எழுத்தில் அக்கறை கொள்ளவைக்கிற என் துணைவியார்.

இம்மூவர் அணியோடு படைப்புக்குறிய தகவல்களைப் பெற்றுத் தந்த காஞ்சிபுரம் குபரக்கோட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்: திருவாளர்கள் சீனுவாசன், தேவராயன்; எனது தேடுதல் வேட்டைக்குத் துணபுரிந்த நண்பர்கள் புதுச்சேரி ராஜசேகரன், பாரீஸ் முத்துக்குமரன், மொரீஷியஸ் பாவாடைப்பிள்ளை அனவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக என்னை நாவலொன்று எழுதவேண்டுமென்று அன்பு கட்டளையிட்ட, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசவோ எழுதவோ அறியாதவராகவே மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரத்திற்கும் எனது நன்றிகள், கண்ணீருடன்."

என் பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லைக்கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளிநடவேண்டுமென்ற ஆசை. காலம் பதில் சொல்லும்." எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இது தவிர பரிசு பெற்றிருக்கும் இந்த நேரத்தில் வேறு சிலரையும் மறக்க முடியாமல் இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது
குறிப்பாக விகடனில் பிரசுரமான எனது சிறுகதை 'பார்த்திபேந்திரன் காதலி'யே(9-5-04) பின்னர் நீலக்கடலாக விரிவாக்கம் பெற்றது. விகடனில் பிரசுரமாகி தனிப்பட்டக் கவனம் பெற்றதால், அதனையே கருவாககொண்டு நாவலொன்று எழுதினேன். எனவே ஆனந்த விகடனுக்கும் எனது நன்றிகள்.

பிறகு திரு. சுஜாதா அவர்கள். நான் அவரது அபிமானி, ஏகலைவன், கட்டை விரலை கேட்கமாட்டாரென்கிற நம்பிக்கையில், நிறைய கடன் பட்டிருக்கிறேன்.

இது தவிர கீழ்க்கண்டவர்களும் எனது வெற்றிக்கு ஏதோவொரு வகையில் பொறுப்பு: திருவாளர்கள் அவ்வை நடராசன், கி. அ. சச்சிதானந்தன், பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன், இரா.முருகன், சதாரா மாலதி, பதிவுகள் ஆசிரியர் கிரிதரன், சுதா இராமலிங்கம், அனைவருக்கும் நன்றிகள்.

மீண்டும் திண்ணை ஆசியருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள் நன்றிகள்..
பணிவுடன்
நாகரத்தினம் கிருஷ்ணா
நீலக்கடல் வெளியீடு:
1.சந்தியா பதிப்பகம்
•பிளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57-53வது தெரு, அசோக் நகர்,
சென்னை -600 083
2.Any.Indian.comலும் கிடைக்கிறது.

நீலக்கடல் -அத்தியாயம் -1

<>நீலக்கடல்<>


நாகரத்தினம் கிருஷ்ணா


'........................ சாவிலே துன்பமில்லை. தையலே இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே நினைக்கண்டு காமுறுவேன்! நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன். இன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு நின்னுடனே வாழ்விலினி நேரும் பிறப்பினிலே! ' -குயில் பாட்டு - பாரதியார்
------------------------------------------------------------------------------------------------
'நான் ' எங்கிருந்து வருகிறேன் ? 'நான் ' எதனை நோக்கிப் பயணிக்கிறேன். இந்த 'முதலுக்கும் ' 'முடிவுக்கும் ' இடையில் 'நான் ' யார் ? எத்தனை கல்பகாலத்திற்கு 'நான் '. விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த 'நான் ' லீலைகளின் பிரதானமா ?, பிரளயமற்றவனா ? முடிவென்பதில்லையா ? அனந்தசயனமற்ற உயிரா 'நான் '. ' பிறவிபற்றிய பிரக்ஞையற்று என்னை 'நீ ' ' சுமந்து செல்கிறாய். உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்.. 'நீ ' ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது. ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை. அசட்டுப்பிள்ளையே! உன் பாதைமுழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது ? என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம். கொஞ்சம் முனைப்பு வேண்டும். 'நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு! கட்டுகளை விலக்கு! உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை 'நீ ' அறிவாயாக.

-----------------------------------------------------------------------------------------------

பெர்னார்: மொழி, நாடு, இனம், மதமென, பிறப்பால் இந்திய மண்ணுக்கு முரண்பட்ட பிரெஞ்சுநாட்டு இளைஞன். ஏழுமணிக்கு எழுந்து, கெல்லக்ஸை விழுங்கியபின் பல் துலக்கி (சில நாட்களில் துலக்காமலும்), கண்ணாடி பார்த்து, லோஷன்களில் குளித்து, அணிந்த 'சூட் ' டைச் சரிபார்த்து, டையின் இரண்டாவது முடிச்சை லிஃப்டில் போட்டு, பாரீஸின் சுரங்கப் பாதை இரயிலான 'மெட்ரோ ' பிடித்து, பயணத்தில் 'லிபரேஷன் ' தினசரியில் மேய்ந்து, பகல் முழுவதும் பாரீஸின் மத்திய பகுதியில் உள்ள 'இந்தியவியல் மற்றும் தெற்கு ஆசியவியற்துறைக் கல்வி மையத்தில்(Le Centre d 'Etudes de l 'Inde et d 'Asie du Sud), ' பேராசிரியர் ழான்-பியர் குரோ வழிகாட்டுதலின்கீழ் தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழிலக்கியங்களின் மீதான ஆய்வுப் பணியில் மூழ்கிக்கிடந்தவன். சமகாலத் தமிழிலக்கியங்களோடு, சத்தம் போடாமல் சைவ சித்தாந்த ஆகமங்களிலும் அவன்காட்டும் அக்கறைகண்டு வியந்த பேராசிரியர், ஒரு நாள் ' பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் புதுச்சேரியிலுள்ள நமது மொழி ஆய்வு ஸ்தாபனத்திற்கு உன்னைப் போல் ஒருவன் தேவையாம், விருப்பமா ', எனக்கேட்க இவன் மறுப்பேதும் சொல்லவில்லை. வடகிழக்குப் பருவகாற்று தீவிரமடைந்து, சோழமண்டலக் கடற்கரையைப் பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், புதுச்சேரியில் வந்திறங்கினான்.

கடற்கரைக்கு அருகிலிருந்த மஞ்சளும் வெள்ளையுமாகவிருந்த அந்த சுண்ணாம்புக் காரைக் கட்டிடம் முதற்பார்வையிலேயே பிடித்துப்போனது. உள்ளே ஆயிரக்கணக்கில் ஓலைச் சுவடிகள். தேர்ந்த தமிழறிஞர்கள் அவற்றைக் கவனத்தோடு பிரித்துப் படித்து அதற்குப் பொருள் காண்கின்றார்கள், அவ்வாறு கண்டவற்றிற்கு உரை எழுதுகின்றார்கள். உரைகள் உடனுக்குடன் கணிணியில் உட்கார்ந்து கொள்கின்றன. அவன் மனதிலிருந்த கற்பனை இந்தியாவேறு, காணுகின்ற இந்தியா வேறு. தன் 'ஞான 'த்தில் இன்றைக்கும் இந்தியா இளைத்துபோகவில்லை என்கின்ற அவனது முதல் நாள் அனுமானம், நாட்கள் கூடக்கூட மேலும் வலுப்பட்டது. மொழி ஆய்வு ஸ்தாபனத்தின் இயக்குனர் எப்..கிரிமால் பாரீஸில் சமஸ்கிருதமும், புதுச்சேரியில் தமிழும் படித்துத் தேர்ந்து, இரண்டிலும் இருபது ஆண்டுகால ஆராய்ச்சியாளராக இருப்பதை அறிய இவனுக்கு உற்சாகம். கூடுதலாக அறிஞர் தெ.வி. கோபாலய்யர் போன்றவர்களின் உறுதுணை. போதாதற்கு புதுச்சேரியின் சிறிய கடற்கரையும், அருகிலிருந்த ஸ்ரீ அரவிந்தரின் ஆஸ்ரமும், கள்ள கபடமற்ற மக்களும், தென்னிந்திய உணவு முறையும் அவனை முற்றிலும் புதுச்சேரிவாசியாக மாற்றிவிட்டது.

இந்த ஓடும் நீரில்தான் பாசியாக சில கனவுகள். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கனவுகள். சந்தித்த மருத்துவர்கள் வேலைப் பளுவிலிருந்து விடுபட்டு மன உளைச்சலைக் குறைக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார்கள். விடுமுறை எடுத்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்குக் 'கொடைக்கானலுக்கு சென்றுவந்தான். சீரடைந்தது உடல் மட்டுமே. மீண்டும் கனவுகள். அறிந்திராத மண், காற்று, ஆகாயம் அதில் அறிமுகமில்லாத மனிதர்கள், கேட்டிராத மொழி என்று ஆரம்பத்தில் சந்தேகித்து ஒதுங்கிய அவனது மனம் நாளடைவில் அந்தப் படிமங்களைத் தேடி ஓடியது. சந்தோஷப்பட்டது. கனவு தொடர்ந்தது.

எப்போதிருந்து அந்தக் கனவுகள்... அன்று சனிக்கிழமை. மாலை நான்குமணி. மொழி ஆய்வு ஸ்தாபன ஊழியர்கள்கள் அனவரும் புறப்பட்டுச் சென்றிருந்தனர். கிரந்தச் சுவடிகளை ஆய்வுசெய்யும் கணபதி, தேவாரம் திருவாசகங்களை ஆய்வு செய்யும் மரியதாஸ், கல்வெட்டு ஆய்வுகளில் ஆர்வம் கொண்டிருந்த முத்தையாவென, சில தமிழறிஞர்கள்மட்டும் உத்திரமேரூரிலிருந்து வந்திருந்த வித்துவான் இரத்தினசபாபதி ரெட்டியாரோடு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் கூடப்பாக்கத்திலிருந்து, பெர்னாருடைய தலித் நண்பன் வேலு வந்திருந்தான். அவனோடு வில்லியனூர் வரை போய்வரவேண்டுமென பெர்னார் தீர்மானித்திருந்தான். புறப்படவிருந்த பெர்னாரை நிறுத்தியது மரியதாஸ். ' உத்திரமேரூர் இரத்தினசபாபதி சில அரிய ஓலைச்சுவடிகளைக் கொண்டுவந்திருக்கிறார். மங்கலம் என்கின்ற கிராமத்தில் கிடைத்ததாம் ' ' அப்படியா! நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா ? ' ' இல்லையென்றால் இரத்தினசபாபதி இவ்வளவுதூரம் வந்திருக்கமாட்டார் '. கோபலய்யர் கேள்விபட்டாரென்றால் சந்தோஷப்படுவார் ' 'கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணப் பாடல்கள்.




அதிலும் இக்கவிதை அநேகமாக யுத்தகாண்டமாகத்தானிருக்கவேண்டும். ' மரியதாஸ் பெர்னாரிடம் ஓலைச்சுவடியை நீட்டினார்.
'கந்தபுராணமா ? '
' ஆமாம். தமிழர்களின் இறைவன் எனப்படும் முருகக்கடவுளின் பிறப்பு, சூரப்த்மன் வதை, வள்ளி, தெய்வானை திருமணம் என முருகன் சரிதைபற்றிய கவிதை வடிவ நூல். சிவாச்சாரியார் எழுதிய சுவடிகளைக் காஞ்சீபுரத்திலுள்ள குமரகோட்டத்து முருகனே ஒவ்வொருநாளும் திருத்தம் செய்ததாக நம்பப்படுகிறது.
வலது கையிற் பெற்று, மின்சார விளக்கின் வெளிச்சத்திற்குக் கொண்டு சென்று வாசிக்க முயற்சித்தான்.
'வண்ணச் சிகரம் வழுவுற்றுக் கீழ்த்தலத்தில்
கண்ணீர் பொழிந்த கடலிடையே வீழ்ந்தனனால்
ஒண்ணுற்ற காஞ்சியுமையவள் கோட்டத்தின்
தண்ணுற்ற நேமித் தடத்திடையே வீழ்வார்போல் '
படித்து முடித்தபோது தலை வலித்தது. மரியதாசிடம் கூறினான்,
' இருக்கலாம். ஆனால் இக்கவிதையில் பிழைகள் இருக்குமென நினைக்கிறேன். மூலமாக இருக்கமுடியாது. மற்றவைகளும் கிடைத்தால் உண்மை விளங்கும். இந்தக் கவிதையைப்பற்றி ஏதோ தகவல்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே '


'ஓ அதுவா ? கச்சியப்ப சிவாச்சாரியார் காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்த வழக்கினை இக்கவிதையிற் பதிவுசெய்திருப்பதைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் '.

வித்துவான் இரத்தினசபாபதி உதவிக்கு வந்தார்.
'பத்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரப் பெண்களிடையே மிகவும் அச்சமூட்டுகின்ற பிரார்த்தனை ஒன்று இருந்திருக்கிறது.. காமாட்சி அம்மன்கோவிலிற் பெண்கள், தாங்கள் வேண்டுவது நிறைவேறினால் 'கருமாறிப் பாய்வதாக ' சத்தியம் செய்வார்கள். அவ்வேண்டுதல் நிறைவேறியவுடன், காமாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் மேல்நிலைக்குப் போய் எட்டிப்பார்த்தால் உலகாணித் தீர்த்தம் என்கின்ற குளம் தெரியும். அக்குளத்தை நோக்கித் தலைகீழாகப் பாய்ந்து உயிரை விடுவார்கள். இந்தச் செய்தியைத்தான் சிங்கமுகன் இறந்த செய்திக் கேட்டு சூரபத்மன் விடுகின்ற கண்ணீரில் அவனே வீழ்வதை ஒப்பிட்டு கச்சியப்பச் சிவாச்சாரியார் தகவலாக அறியத்தருகின்றார் '
அந்தச் செய்தியை முழுவதுமாக கிரகித்துக் கொண்டபோது, பெர்னார் உடலில் ஏற்பட்ட நடுக்கம் மனதையும் அசைத்திருந்தது. வேலுவிடம் தன்னால் இன்றைக்கு வெளியிலெங்கும் சென்றுவர இயலாதென அன்புடன் தெரிவித்தான்.

அன்றையலிருந்து, பெரும்பாலான இரவுகளில் வரிசை வரிசையாய்ப் பெண்கள் அவன் கனவுகளில் 'கருமாறி 'ப் பாய்ந்தார்கள். அடிக்கடி பகலில்கூட காட்சிகளாகவிரிந்து அவனை அலைக்கழித்தனர்.
அப்பெண்கள் கூட்டத்தில் ஒருத்திமட்டும் முந்திக்கொண்டு செய்யும் முயற்சிகள் இவனுக்கு விநோதமாகவிருந்தது. 'உன் உயிரைப் போக்கிக்கொள்வதில் இவ்வளவு ஆர்வமா ? கேட்டுப் பார்த்தான் பதிலில்லை. அறிந்தவளாக இருந்தாள். அவளது கண்கள்-பார்வை, நாசி-சுவாசம், இதழ்-மொழி, கூந்தல்-மணம், கைகள்-வளையோசை, கால்கள்-கொலுசு அனைத்துமே புதிதல்ல-பழகியவை. எப்போது ? எங்கே ?
'........ பரந்து கிடக்கும் நீலக்கடல், ஆவேசம் கொண்ட அலைகள், துள்ளியும் துள்ளாமலும் வலம் வருகின்ற நீர்வாழினம், அவற்றைக் கண்டு ஆர்ப்பரிக்கும் பறவைகள், பாதங்களை குறுகுறுக்கச் செய்யவென்றேப் படுத்திருக்கும் கடற்கரை, போர்த்தியமணல், அணைத்திருக்கும் பச்சைவெளி - வெப்பமண்டலக் காடு - திருத்திய நிலத்தில், மரகதத்தில் பதித்த முத்தும் வைரமுமாக குடியிருப்புகள். திரும்புகின்ற திசைகள்தோறும், தென்னையும் வாழையும் சூழ்ந்திருக்க அவள்....

பிறகு ..தூரத்திற் கோபுரம், அகன்றவீதியில் ஒதுங்கிய அந்த வீடு. பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள் அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போல சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அக்கதவு குறைந்த அளவே திறந்திருக்க அதனை அடைத்துக் கொண்டு மீண்டும்... அவள்.
முகம் மட்டுமே தெரிகிறது. ஒருக்களித்த தலை, குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்தக் கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அல்லது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நீலக்கடலும், நெய்தல் நிலமும்... கோபுரமும், அகன்ற வீதியும், மண்சுவரோடு எழுந்த வீடும், திறந்திருந்த ஒற்றைக்கதவின் இடைவெளியை அழகுபடுத்திய முகமும் திரும்பத் திரும்ப வருவதற்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் இறங்கி பெர்னார் களைத்திருந்தான்.


தொடரும்.....

nakrish2003@yahoo.fr

நீலக்கடல் -அத்தியாயம் -2

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

Tes pieds sont aussi fins que tes mains, et ta hanche
Est large a faire envie a la plus belle blanche;
A l 'artiste pensif ton corps est doux et cher;
Tes grands yeux de velours sont plus noirs que ta chair.
..................................................................(A une Malabaraise) -Baudelaire


லகவரைபடத்தில் 20.5 ' தெற்கு அட்சரேகைக்கும் 57.33 ' கிழக்குத் தீர்க்கரேகைக்கும் இடையில் அந்த முத்து. கடகரேகையை நெருங்கிக் கிடக்கும் இந்தியப் பெருங்கடலின் அழகு முத்து. நீரிடையே பேசும் நிலத்துண்டு. மும்பையிலிருந்து 4800 கி.மீ. அல்லது பாரீஸிலிருந்து 9426 கி.மீ அல்லது சிட்னியிலிருந்து 9114 கி.மீ பயணத்தில் நம்மை மயக்கும் இயற்கைத் தேவதை.

பத்தாம் நூற்றாண்டில் அராபியர்கள் அம்முத்தைக் கண்டெடுத்து ஆச்சரியத்தில் மூழ்கிச் சூட்டிய பெயர் 'டினா அரோபி (Dina Arobi). கி.பி 1500ல் போர்த்துக்கீசியர்கள் சூட்டிய பெயர் அன்னத் தீவு( Ilha do Cirne). கி.பி 1598ல் டச்சுக்காரர்கள் தங்கள் இளவரசர் நினைவாக 'மொரீஸ் ' எனப் பெயர் வைக்க கி.பி 1715ல் வந்திருந்த பிரெஞ்சுக்காரர்கள் வைத்த பெயரோ பிரெஞ்சுத் தீவு(Ile de France). இந்திய வணிகத்திற்குத் தீவின் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கி.பி 1810ல் பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த தீவினைக் கைப்பற்றி மீண்டும் சூட்டிய பெயர் மொரீஷியஸ்....ஆப்பிரிக்கர், இந்தியர், சீனர், ஐரோப்பியர் சேர்ந்து வாழும் ஒரு பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். இன்றைக்கும் இந்தியப் பெருங்கடலில் எழுந்துநிற்கும் இவ்வுயிர்ப் பிரதேசத்தை ஊட்டிவளர்த்து, கட்டியெழுப்பிக் கரைந்துபோன தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்.. அவர்தம் கைத்திறனில் பிறந்த சாலைகளும், சோலைகளும், கூடங்களும், கோபுரங்களும் அப்புலம்பெயர்ந்த மக்களின் புகழ்பாடுபவை. சொந்தமண்ணைப் பிரிந்து, வந்தமண்ணின் வாழ்க்கையை அங்கீகரித்த அந்த மனிதர்களின் சுகங்கள் அனைத்துமே சோகங்களால் எழுதப்பட்டவை....பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழனின் உதிர இலக்கியம் உயர்ந்தது;
பதினெட்டாம் நூற்றாண்டு......
இந்தியப் பெருங்கடலின் தொப்புளாக அந்தத் தீவு- மொரீஷியஸ் தீவு. சுற்றிலும் மலைத் தொடர்கள், அவற்றைத் தழுவிப் பிரிய மனமில்லாமல் சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்..வடமேற்கில் கடல் - நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இஇஇறங்கிவரும் நிலம் - நெய்தல் நிலம் -. பெயர் போர் லூயி (Port Louis). நீலக்கடல் அலைகளின் நிறுத்தாத நடனம். நட்டுவாங்கமாக கிறீச்சிடும் கடல் நாரைகள், கரையும் நீர்க்காகங்கள். இடைக்கிடையே கரையின் திசையிற் பாய்ந்து மீண்டும், புறப்பட்ட இடத்தினை ஞாபகத்தில் வைத்துத் திரும்புகின்ற அவற்றின் தீராத விளையாட்டு. தெளிந்த கடல் நீரில், தெரிந்த இருட்டு படலம். அவற்றில் வெள்ளியும் தங்கமுமாய் உயிர்பெற்று அலைகின்ற மீன்படலம். வெள்ளியைப் பொடிசெய்து கரையெங்கும் பரப்பியதுபோன்று கடலோர மணல். முடிந்தமட்டும் அவற்றைக் கொள்ளை அடித்துக் கடலிற் சேர்ப்பதில் கவனமாயிருக்கும் அலைகள்.. அலைகளின் பிடியிலிருந்து தப்பித்து மணற் பறித்து முகம் புதைக்கும் இல்லி நண்டுகள், மென்சிவப்புக் கடலோர நண்டுகள். நீரும் காற்றுக் குமிழ்களுமாய் வெடித்து அடங்கும் அவற்றின் சுவாசம். மேற்கே தன் கதிர்களை, அடர்ந்திருந்த வேம்பு, மா, இலவு, வாதுமை, புன்னை, மூங்கில் அடர்ந்த மரங்களுக்கிடையே நிறுத்தித் தன்னை அடையாளப் படுத்தியவாறு வீடு திரும்பிகொண்டிருக்கும் சூரியன். தெளிந்த வானத்தில் திடுமென்று கருத்த மேகம். மலைப்பகுதிகளிலிருந்து எப்போதும் போல சிலுசிலுவென்ற சீதளக் காற்று, இகபர இன்பங்களை செய்தியாகச் சொல்லும் இயற்கையின் மடல்.
அவள் தெய்வானை, இளம் பழுப்புச் சருமம் - கரிய நீண்ட ஒற்றைப் பின்னல். முன் எழுந்த அளவான மூக்கு. மை பூசிய கரிய விழி.. அடர்த்தியான புருவங்கள் - வழுவழுப்பும் நேர்த்தியும் நெருங்கியிருக்கும் கன்னக் கதுப்புகள் - அவற்றில் பருவத்தின் நுண்ணிய மணிகள். ஈரப்பதமின்றி உலர்ந்திருந்த அதரங்கள் விரித்த பவழச் செவ்வாய். யோசித்துப் படைத்திருந்த அளவான நெற்றி. கடலலைகளின் தொடர்த் தழுவலில் கூடுதலாக வெளுத்துப் பூத்திருக்கும் பாதம். .நனைந்த கால்களில் சுழித்துக் கொண்டு பூனை ரோமங்கள். .அவ்வப்போது அலைச்சாரல்களில் நனைந்து நீர் சொட்டும் கூந்தல், மூக்கு, முகவாய், முலைக்காம்புகள். சுதந்திரமாகவிருந்த தோள்களில் வியர்வை உலர்ந்த உப்புத் தேமல்கள். உடலையொட்டிய திருபுவனம் ஈர நூற்சேலை. அழகி- தமிழச்சி...
.
காத்திருக்கிறாள். கடலையொட்டிக் காத்திருக்கிறாள். காத்திருப்பது என்பது கடந்த ஒருமாதமாக அவள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். எப்போது வேண்டுமானாலும் வருவாள். மணிக்கணக்கில், சில நாட்களில் காலையிலிருந்து மாலைவரை காத்திருப்பாள். துறைமுகத்தில் வேலைசெய்துவிட்டுத் திரும்புகின்ற கறுப்பின மக்களுக்கு அவள் காத்திருப்பும், கேள்விகளும் பழகிவிட்டவை. இரவுநேரத்தில் அவர்களது கபான்களில் பாடும் கிறெயோல் பாடல்களிற்கூட அவள் இடம் பெறுகிறாள். அவள் கவனம் முழுவதும் கடற்கரையின் இடது பக்கமிருக்கும் லெ மோர்ன் டெ லா தெக்கூவர்த்து மலையை ஒட்டியே இருக்கும், தீவுக்குள் நுழையும் எந்தக் கப்பலாகவிருந்தாலும், அதன் மூக்கைக்காட்டித் தொடர்ந்து வெளிப்படும் மலை அது.
அவள் அவனுக்காகக் காத்திருக்கவில்லை, தனக்காகக் காத்திருக்கிறாள். அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக்கொண்டிருக்கிறாள். தனியொருவளாக தொப்புட் கொடியைக் கைககளிற் பற்றித் தேடிக் கொண்டிருக்கிறாள். இந்த மண், காற்று, ஆகாயமென அனைத்திலும் நுண்துகள்களாக ஒட்டி, விரட்ட விரட்ட, எழுந்து மீண்டும் படிந்து தன் வேரினைத்தேடிக் களைத்துப் போகிறாள். காலடியிற் கடலலைகள், திருமுடியிற் கதிரவனின் கதிர்களெனத் திரும்புகின்ற பக்கமெல்லாம் மலைத்தொடர்களின் மெளன ஓங்காரம். அவ்வோங்கார ஓசையின் நாதமாக, அலைகளூடே பயணித்து மீள்கிறாள். மலைமுலைகளை மறைத்து அழகூட்டும் மஸ்லின் மேகங்கள், அவற்றைத் தழுவும் மரகதப் பசுமையிற் கச்சைகள். கச்சையைக் கண்களால் உரிந்து, காதற்தாபத்துடன்கூடி, கழிவுகளிற் தன் முகம் தேடுகிறாள். மலைகளின் சிகரங்களில், ஊற்றெடுத்து உருண்டுவிழும் நீரருவிகளில் நீந்திக்களைத்து அதன் சங்கமச் சேற்றில் மிதக்கும் பவழப்படிமங்களில் தேடுகிறாள். சிவப்புப் புல்புல் -பச்சைக் கிளிகள்-புள்ளிகளிட்ட புறாக்கள்- துள்ளிப் பறக்கும் மைனாக்கள். அவற்றின் இதயத்தை வருடும் இயற்யைின் ஒட்டுமொத்த நாதவோசை.- முடிவற்ற சங்கீதம். அந்திநேர சுரங்களுக்காகவே காத்திருந்து, வானவில் இழைத்த வண்ணத்தடத்தில் மெல்லடிவைத்து பயணிக்கிறாள். என்றேனும் ஒருநாள் இந்தியப்பெருங்கடலில் அவன் முகம் காட்டக்கூடும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறாள். கண்ணுக்கெட்டிய வானமும், கடலும் மென்மையான நீலத்தில் உறவு கொண்டாட, கண்ணுக்கெட்டா வானமும் கடலும் அடர்ந்த நீலத்தில் அமைதியாகக் கிடந்தது. அந்த அமைதிக்குப் பின்னேதான் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியும் காத்திருப்பும் கடந்த சிலநாட்களாக அவளது வாழ்க்கையாகிவிட்டது. போர் லூயி துறைமுகத்திலிருந்து இந்தியத் தீபகற்ப திசை நோக்கிப் பயணிக்கவிருக்கும் பிரெஞ்சு கிழக்கிந்தியகம்பெனியின் வணிகக் கப்பல்களில் ஏதாவதொன்றில் தொற்றிக்கொண்டு, அவனைத் தேடி ஓடலாம் என்கின்ற உந்துதலுங்கூட அவளிடம் இப்போது குறைந்து சோர்ந்திருக்கிறது. என்றாவது மீளுவான் என்கின்ற நம்பிக்கையில் வழக்கம்போல நீண்ட ஆழமான பெருமூச்சு. கண்களை மெல்ல மூடி அவன் சம்பந்தப்பட்ட நினைவுத் தோணியில் ஆனந்தமாகப் பயணித்தாள்......
'தெய்வானை.. தெய்வானை.. ' அழைப்பது பெர்னார் போலவிருந்தது. நினைவைக் கலைத்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பியபொழுது முழங்காற் சாராயும் ஓலைத் தொப்பியுமாக கைலாசம் நின்றுகொண்டிருந்தான். இ
' ம் ' புறப்படு தெய்வானை, அம்மா உனக்காகக் காலையிலிருந்து காத்திருக்கிறாங்க...
'இல்லை அண்ணா. நீங்கள் போங்கள் அவர் எப்படியும் வந்திடுவார். அவரில்லாமல் திரும்ப மாட்டேன். '
'கப்பல் புதுச்சேரியையே அடைந்ததோ என்னவோ ? அதற்குள் நாமுள்ள தீவுக்கு மீண்டும் எதிர்பார்க்கிறாய். நம்புகின்ற வகையிற் செயல்படு. வானம்வேறு இருண்டுகொண்டு வருகிறது. மழையும் காற்றும் வருவதற்கான அறிகுறி. உடனே கிளம்பு ' மறுத்த தெய்வானை என்ன நினைத்தாளோ, சகோதரனின் வலதுகரத்தை அன்பாகப் பற்றினான்.
அவன் கூறி முடிக்கவில்லை. தெற்கே மரங்களுக்கிடையில் நீண்டு உடைந்து அடுத்தடுத்து எழுந்து மறைந்தன ஒளிக் கீற்றுகளாய் மின்னல்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சில விநாடிகளில் இடியுடன் கூடிய மழை சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. இருவருமே ஓடினர். தங்கையின் உடற்பலவீனத்தைப் புரிந்து மெதுவாகவே ஓடினான் சரிவுகளில் சற்று வேகமாகவும், சம நிலங்களில் நிதானமாகவும், செங்குத்தான பகுதிகளில் சிரமத்துடனும் கடக்கவேண்டியிருந்தது. மழையின் வேகம் கூடியிருந்தது. கடல் அலைகள் உயர்ந்து உடைந்தன. மரங்கள், குறிப்பாக தென்னைகள் வைளைந்து, தென்னையோலைகள் கழுத்தைவிட்டு உயர்ந்த கேசம்போலக் காற்றில் உயர்ந்து மீண்டும் திரும்பின..
தெய்வானை, 'எங்கேயாவது நின்றுபோகலாமே ' என்கின்ற தன் எண்ணத்தைச் சகோதரனிடம் வெளியிட்டாள்.
'அண்ணா என்னால் தொடர்ந்து ஓட முடியாது. கொஞ்சம் காத்திருப்போம் மழை விடட்டும். ' அங்கே தென்னை மரங்கள் வரிசையாக இருக்கின்றனவே. அங்கே சென்று நிற்கலாமா ? '
' வேண்டாம் அங்கே வேண்டாம். இந்த நேரத்தில் அவற்றின் காய்களோ, மட்டைகளோ தலையில் விழலாம். அதோ வாதுமை மரங்கள் நிற்கின்றன பார். அங்கே வேண்டுமென்றால் போகலாம் '
இருவரும் அருகே தெரிந்த வாதுமை மரங்களின் அடியில் போய் நின்றார்கள்; பக்கத்திலே, எங்கேயோ இடிவிழுந்து மூங்கிற் காடுகள் சட சடவெனப் பற்றி எறிவதும் அவற்றுக்கிடையேயிருந்து தப்பும் விலங்குகளின் அபயக் குரல்களும் அடை மழையின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டுக் கேட்கின்றன. மழையில் நனைந்திருந்த இருவரது உடல்களும் தேவையின்றி நடுங்கின..
'கிழக்கே பார். அடிவானம் கூடுதலாகக் கறுத்துக் கொண்டு வருகிறது. காற்றின் வேகம் குறையவில்லை. முந்தைக்கு இப்போது அதிகமாகவிருக்கிறது.. அநேகமாகப் புயல்கூட வீசலாம். ' கைலாசம் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு, தங்கையின் இடதுகையை ஆறுதலாகத் தனது இடது கரத்தில் வசப்படுத்திக் கொண்டு பேசினான்.
'பறங்கியர்களுக்குப் பிரச்சினையில்லை. நம்மவர்களுக்கும், கறுப்பர்களுக்கும்ந்தான் பிரச்சினை. நம்முடைய தேசத்து விழல் வேய்ந்த குடிசைகளே பரவாயில்லை. இலைகளையும் தழைகளையுமிட்ட கபான்களில் எத்தனை நாைளைக்கு இப்படி வாழ்க்கையை ஓட்டுவது ? எப்படியாவது கவர்னர் சமூகம் சென்று நாம் விண்ணப்பிக்கலாம். மீண்டும் புதுச்சேரிக்கே திரும்பவேண்டும் அண்ணா. அது முடியுமா ?. நமக்காக பயணம் மேற்கொண்டுள்ள பெர்னாரிடமிருந்து தகவல்கள்பெற எவ்வளவு நாட்கள் ஆகுமோ ? எனக்குப் பயமாக இருக்கிரது அண்ணா '
' புதுச்சேரிக்குத் திரும்புவது சுலபத்தில் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையென அம்மா அடிக்கடி நம்மிடம் சொல்வாறே ? மறந்துவிட்டாயா ? பெர்னார் மீது எனக்கு அளவுகடந்த நம்பிக்கை இருக்கிறது. உரிய தகவல்களோடு தீவுக்குக் கூவருவார். காத்திருப்போம். அம்மா தினந்தோறும் வணங்கும் சர்வேஸ்வரன், புதுவை வேதபுரீஸ்வரர் தயவு வேண்டும். எனக்கும் நம்முடைய மண்ணை மீண்டும் மிதிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சரி புறப்படு. மழை கொஞ்சம் விட்டிருக்கிறது. '
இருவரும் வடகிழக்காகச் சென்ற செங்குத்தான பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.
' என் பின்னே வா. விஷமுட்கள் நிறைய இருக்கின்றன '
அண்ணன் கைலாசத்தின் வார்த்தைகளை ஏற்று, தெய்வானை பின்தொடர்ந்தாள். கைலாசம் வேகமாக நடக்கப் பழகியவன். அவள் அப்படியல்ல. சிறிது தூரம் நடந்திருப்பார்கள்.
'அம்மா ' வலது காற்பாதத்தினைத் தூக்கியவாறு ஒற்றைக் காலில் நிற்க முயற்சிசெய்தவளை ஓடிச்சென்று தாங்கிக் கொண்டான். அவன் தோள்களை அழுந்தப்பற்றிக் கொண்டு வலதுகால் பாதத்தை முடிந்தமட்டும் திருப்ப முயன்றாள். குதிகாலில் முள்தைத்தவிடத்தில் நீலம் பாரித்திருந்தது. தனது ஆட்காட்டி விரலால் மெதுவாகத் தடவினான். முள் இருப்பதன் அடையாளமாக நெருடியது. வரிசையாக நின்றிருந்த தென்னைமரங்களின் திசைக்குச் சென்று, கீழே கிடந்த ஒரு தென்னை ஓலையிலிருந்து ஈர்க்கினை எடுத்து இரண்டாக உடைத்து அவளது பாதத்தில் முள் தைத்தவிடத்தில் மடித்துப் பொருத்தி, முள்ளைப் பிடுங்கி எறிந்தான். இரத்தம் முத்தாக எட்டிப் பார்த்து யோசித்துப் பின்னர் கசியத் தொடங்கியது. அருகிலிருந்த புதர்களிலிருந்து நாயுருவியைக் கொண்டுவந்து கசக்கி அதன் சாற்றினை முள்தைத்தவிடத்தில் விட்டு இலைகளாற் சூடுபறக்கத் தேய்த்தான். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அண்ணனின் சிசுருட்ஷைகளை ஏற்றுக் கொண்டாள். 'கொஞ்ச நேரம் இவ்வலி நீடிக்கும். பிறகு சரியாகிவிடும் ' என்ற. கைலாசத்தின் ஆறுதல் வார்த்தைகளையேற்று அவன் முன்னே நடக்க இவள்
வலதுகாலைப் பிடித்தவாறு நிதானித்து நடந்தாள்.
குறைந்தது இன்னும் இரண்டு கல் தூரமாகினும் அடர்ந்த மரங்களுக்கிடையே நடந்தாக வேண்டும். மழை இப்போது முற்றிலுமாக குறைந்திருந்தது. வானம் நீலப்படிகமாக எப்போதும்போலத் தெளிவான நிலைக்கு மீண்டிருந்தது. மரங்களின் கிளை மற்றும் இலைகளிலிருந்து மழைத்துளிகள் சீராகச் சருகுகளில் சொட்டிக்கொண்டிருந்தன. நிலம் சிலவிடங்களில் நீர்த்தாரைகளுக்கு வழிவிட்டு இறுகிக்கிடந்தது.
சிற்றோடைகளாகவும் மெல்லிய அருவியாகவும் ஆங்காங்கே மழைநீர்கள் அவதாரமெடுத்திருந்தன. அவ்வோடைகளில் நீர்தவழ்ந்து நிலத்தை அரித்து எழுந்த இடங்களில் சிறிய கெண்டைமீன்கள். கூடுதலாக நீர்தேங்கியிருந்த சிலவிடங்களில் பச்சைத் தவளைகள், மண்டூகங்களின் கர்ண கடூரமான சப்தம் . இரை கிடைத்த ஆர்வத்தில் அவற்றை நோக்கி ஊர்ந்துவரும் பாம்புகள். இடையிடையே பொன்வண்டுகளின் ரீங்காரம். பழகிய தடமென்றாலும் தெய்வானைக்குள் பயம் புகுந்துகொண்டது.
' அண்ணா சற்று வேகமாகப் போ. இருள் கவிழ்வதற்குள் காட்டைக் கடந்துவிடவேண்டும். எனக்கு மிகவும் அச்சமாகவுள்ளது. '
' பயம் வேண்டாம். 'நீண்ட மலையின் '(Montagne Longue) வடக்கு திசையின் அடிவாரத்திலேதானிருக்கிறோம். இன்னும் சிறிதுதூரந்தான். '
புதுவெள்ளக் களிப்பில் தூரத்தில் துள்ளிப்பாயும் 'கல்பாஸ் நதியின் '(River des Calebasses) ஆரவார ஓசையைக் காதில் வாங்கியவாறு இருவரும் அத்திசைநோக்கி நடக்கவாரம்பித்தார்கள். சகோதரன் வார்த்தைகள் அவளுக்கு நம்பிக்கையூட்டியிருக்கவேண்டும். பயத்தினை உதறிவிட்டு, அவன் பின்னே நடக்கவாரம்பித்தாள். கதிரவன், நாளைமுடித்ததன் அடையாளமாக மேற்கில்தெரிந்த மலைகளின் பின்னே கதவடைத்துக் கொண்டிருந்தான். கடிக்கும் அட்டைகளையும் தெள்ளுப்பூச்சிகளையும் ஒதுக்கிவிட்டுத் தாழ்ந்த கிளைகளின் மோதல்களிற் தப்புவித்து, அபாந்தொன்னே (River l 'abondonnais) ஆற்றினையொட்டியிருந்த சமதளத்தை இருவரும் அடைந்திருந்தார்கள்.
ஒழுங்கற்ற சாலைகளில், காளான்களென இந்தியத் தமிழர்களுக்கெனவும், மலபார் மக்களுக்கெனவும் உருவாக்கப்பட்டிருந்த கபான்கள் எனப்படும் குடியிருப்புகள். மரப்பலகைகளால் உருவாக்கபட்டு கூரைகளில் இலை, தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்களின் கூடுகள். கூரைகளிருந்து வரும் அரிசிச்சோறும், குழம்பின் மணமும் இவர்களின் நாசியை மட்டுமல்ல மனத்திற்கும் சந்தோஷத்தைக் கொண்டுவந்திருந்தது.
தங்கள் குடியிருப்பைக் கண்ட ஆனந்தத்தில் ஓட்டமும் நடையுமாக விரைந்துவந்தார்கள். கதவு திறந்திருந்தது. வீட்டிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் இறைந்து கிட,ந்தன. இவர்களின் அன்னை காமாட்சி மூர்ச்சையாகிக் கிடந்தாள். அவள் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.


தொடரும்.....

நீலக்கடல் - அத்தியாயம் -3

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

சென்-மாலோவிலிருந்து சென்றோம் -ஒரு
சிங்காரப் போர்க்கப்பலொன்றில்
ஆங்கிலக் கால்வாய்க்காக -பிறகு
அங்கிருந்து பிரிஸ்டல் பயணம்
ஆங்கிலேயரை அழிப்பதற்காக (1)


'லெ பொந்திஷேரி ' என்றப் பிரெஞ்சு கப்பல். எப்போதும்போல பயணக் களைப்பை மறந்து கடற்பாடலை வட்டமாகக் கைகோர்த்து ஆடியபடி பாடிக்களிக்கின்ற மத்தலோக்கள்(கப்பல் ஊழியர்கள்).. மேலே அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள நீலவானம். வானச்
சீலையில் வகை வகையாக ஓவிய உயிர்களை உலவவிடும் வெண்பஞ்சு மேகங்கள்; அவற்றிற்கு மெருகூட்டும் சூரியன். கீழே அதற்கிணையாக அமைதியாகக் கிடக்கும் நீலக்கடல். வானம் கடலிலா, கடல் வானத்திலா எனவறிந்துணர முடியாத வகையில், இரண்டிற்குமிடையே மயக்க உறவு. மேற்குக் காற்றில் எழுந்து அடங்கும் அலைகள். தெளிந்த நீருக்குள் கம்பீரமாக, பெரிய கண்களுடன் நீந்திச் செல்லும் சுறா, கும்பல் கும்பலாய்ப் பயணிக்கும் வெள்ளி நிற வெளவால் மீன்கள், தன் இனந்தேடி அலையும் விளைமீன்கள், வெள்ளியுடல் பாரை
மீன்கள். அவற்றைத் தொடர்ந்து மேலே பறந்து பயணிக்கும் கடல் நாரைகள். எப்போதேனுமெழுந்து அசுரத்தனமாக சுவாசித்து மீண்டும் நீரில் மூழ்கி மறையும் திமிங்கிலங்கள். ஈரக்காற்றுடன், உப்போடு கூடிய முடைநாற்றம். யுகங்கள் தோறும் வரலாறு படைக்கும் இந்தியப் பெருங்கடல்.
'லெ பொந்திஷேரி ' ஒரு கராவெல் ரக வர்த்தகக் கப்பல். நாற்பது மீட்டர் நீளமும் பன்னிரண்டு மீட்டர் அகலமும், நிறைய பாய்மரங்கள் கொண்ட, 1200 டொன்னொ ( ஒரு டொன்னோ என்பது 2,83M3) கொள்ளளவும் பொருட்கள் ஏற்றக்கூடிய பிரெஞ்சு கிழகிந்தியக்
கம்பெனியின் பிரத்தியேகக் கப்பல். கப்பலின் தலைவன் வழக்கம்போல 'தெலாமர் ' (.Delamare). பதினைந்து நாட்களுக்கு முன்னதாக, போர் லூயி துறைமுகத்திலிருந்து புறப்பட்டிருந்தது. இந்திய வியாபரிகளுக்கென சுத்தமான தங்கமும் வெள்ளியும் போக, புதுச்சேரி கவர்னருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், இதர பிரெஞ்சு இந்தியக் கம்பெனியின் ஊழியர்களுக்குமாக இரண்டாயிரம் பொர்தோ சிவப்பு ஒயின் போத்தல்கள், சாராயம், கோதுமை மாவு, பதப்படுத்தபட்ட பாற்கட்டி, பன்றியிறைச்சி, மாட்டிறைச்சி, இரும்புத் தகடுகள்-கட்டிகள், துப்பாக்கிகள், அவைகளுக்கான ரவைகளெனப் பயணித்துக் கொண்டிருந்தன. அவற்றை கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டி கப்பலின் மத்தலோக்கள் (Matelots), முன்பும் பின்பும் பீரங்கிகளை ஒட்டி மிகக் கவனத்தோடு நின்றிருக்க, பின்புறமும், வலமும் இடமுமாக இரு பக்கங்களிலும் பாதுகாப்பிற்காக பீரங்கிகளுடன் கொர்சேர்கள்*(Corsaire).2
பிரான்சின் சேன் மாலோ(Saint -Malo) பகுதியைச் சேர்ந்த தரகர்கள், ஸ்பெயின் காலனி நாடுகளிடமிருந்து பெறப்பட்ட இருபத்து நான்கு காரட் சுத்தமான தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளைச் சுமந்து சென்று இந்தியாவில் இறக்கிவிட்டு அதற்குப் பதிலாக வாசனைத்திரவியங்களையும், பட்டுத் துணிகளையும், கொழுத்த இலாபத்துக்குப் பெற்றுக் கப்பல்களை நிரப்பிவருவது வழக்கம். சில சமயங்களில் பிரான்சின் செனான் மற்றும் அமியன் பகுதியிலிருந்து அழகிய வேலைப்பாடுள்ள கம்பளி விரிப்புகளும், பிரான்சின் லாங்குடோக் பகுதியிலிருந்து சற்றுக்
கனமான கம்பளிகளும், மிக மெல்லிய துணிகளும், இந்தியப் நவாப்களுக்கும், சுல்தான்களுக்கும், வசதிவாய்ந்த உயர்ஜாதி இந்துக்களுக்குமெனத் தங்கச் சரிகைகளும், பவழ வேலைப்பாடுகளும் கொண்டு வருவதுண்டு. ஆனால் இவற்றிற்கான சந்தைத் தேவை குறைவாகவே இருந்தது. இந்தத் துறையில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேயரோடு போட்டியிடும் நிலையில் பிரெஞ்சு வணிகர்களில்லை.
பிரான்சுக்கும் இந்தியாவுக்குமான கப்பல் போக்குவரத்தென்பது ஏப்ரலிலிருந்து அக்டோபர்வரை வீசும் பருவக்காற்றினைப் பொறுத்தது.
காத்திருந்து இந்தியப் பெருங்கடலில் வீசுகின்ற தென்மேற்குப் பருவக் காற்றைத் தங்கள் பயணத்திற்கு உபயோகிக்க, இப்பாய்மர வணிகக் கப்பல்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். இதனை உணர்ந்து பிரான்சிலிருந்து கப்பல்கள் பெரும்பாலும் டிசம்பரிலிருந்து -மார்ச்சுக்குள் புறப்பட்டுவிடும். கொண்டு செல்லும் பொருட்களுக்கு நல்ல விலை வேண்டுமென்றால் இதர ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு முன்னதாக இந்தியாவில் இவர்கள் வசமிருக்கும் புதுச்சேரியிலும், பின்னர் வங்காளத்தில் சந்திரநாகூரிலும் பொருட்களை இறக்கியாகவேண்டும்.
பிரான்சின் வடமேற்கிலுள்ள லொரியான்(Lorient) துறைமுகத்தில் கடுங்குளிர்காலத்தில், கப்பற்போக்குவரத்து என்பது மிகவும் கடுமையாகவிருக்கும் எனக் கருதப்படும் நேரத்தில் நேரத்தில் வணிகக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் நிதானித்துப் பாய்விரித்துப் பயணத்தைத் தொடங்கிவிடும். கஸ்கோஜ்ன் வளைகுடாவில் (Le golfe de Gascogne) ஒரு மாதம் மெள்ள ஊர்ந்து ஆப்ரிக்காவின் 'கொரே ' (Goree)துறைமுகத்தில் சில நாட்கள் ஓய்வு. பின்னர் பூமத்தியரேகையைக் கடக்கும்வரை போதிய காற்றில்லாமல் பயணம் மிகவும் சிக்கலாகிவிடும். ஆப்ரிக்காவின் நன்நம்பிக்கை முனை (Le Cap) கடக்கப்படுவதற்கு இந்தவகையில் நான்குமாதங்கள் பிடித்திருக்கும். இந்த நேரத்தில் பிரெஞ்சுத் தீவு (Ile de France) நான்குமாதப் பயணத்திற்குப் பிறகு கப்பல் தலைவனுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் சொர்க்க பூமி. ஒரு மாதத்திற்கு குறையாமல் ஓய்வு. தவிர டச்சுகாரர்கள் கி.பி 1710ல்இந்தத் தீவினை விட்டுப்போன பிறகு 1715ல் கியோம் துய்ஃப்ரெஸ்ன் (Guillaume Dufresne) என்ற கப்பற் தலைவன் பிரெஞ்சு அரசின்பேரில் கைப்பற்றியபிறகு இவர்களுக்கு இஇத்தீவு மிகவும் வசதியாயிற்று. இத்தீவிலிருந்து மடகாஸ்கர் நோக்கி வடமேற்காகப் பயணித்து அங்கிருந்து வடகிழக்காக பயணிக்கவேண்டும். இந்தியாவை நெருங்கும்போது மாலைதீவுக்கும் இலட்சத்தீவுகளுக்குமிடையில் பயணித்து மலபார் கடற்கரையை அடைந்து அங்கிருந்து தெற்கு நோக்கி குமரிமுனையை நோக்கி நகர்ந்து இலங்கைக்குத் தெற்காக கடந்து கிழக்குக் கடற்கரையில் வடக்கு நோக்கிச் சென்று இறுதியாக புதுச்சேரியில் நங்கூரமிடும்.
இன்றைக்குக் காற்றுச் சாதகாமாக இருந்தது. கப்பல் கப்பித்தேன் தெலாமர் 'லெ பொந்திஷேரி ' கப்பலின் அனைத்துப் பாய்களையும் விரித்திருந்தான். மணிக்குப் பத்துக் கடல்மைல் வேகத்தில் கப்பல் போய்கொண்டிருந்த சந்ததோஷத்தில் கபினுக்குத் திரும்பினான். அவனது கபின் மூன்று டொன்னோ அளவுடையது. அவனுடைய அதிகபட்ச உடைமைகள் பெரும்பாலான கப்பலூழியர்களைப் போன்றே கூடுதலாக ஒரு ஆடை, ஜெபித்தற் பொருட்டு ஒரு பைபிள், பிரத்தியேகச் சலுகையில் சாராயம், இறைச்சி வற்றல்கள் மற்றும் சொஸ்ஸீஸ்கள். கபினுக்குள் நுழைந்தவன் ஓரு சாராயப் போத்திலையும், இரண்டு கண்ணாடிக் குப்பிகளையும் எடுத்துகொண்டு, மகோகனி மரப்படிகளில் இறங்கி, அருகில் இருந்த மற்றொரு கபினுக்குள் நுழைந்தான். பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் உயர்மட்ட மக்களுக்கான பிரத்தியேக அறை. கபினின் கதவைத் மெல்லத் தட்டிவிட்டு நுழைந்தான். சிறியகபினென்றாலும், வேலைபாட்டுடன் கூடிய கருங்காலி மரத்தினாலான மேசையும் நாற்காலியும். நாற்காலியின் இருக்கையிற் தோல்தைத்திருந்தது. அழகான மகோகனி மரத்தினாலான கட்டில், மத்தியில் இழுப்பறைகொண்ட பிரான்சின் ரென்(Rennes) பகுதியைச் சேர்ந்த ஒரு பண்டப் பேழை. அந்த இளைஞன் மேசையில் உட்கார்ந்துகொண்டு, மையைத் தொட்டு இறகினால் எழுதிக் கொண்டிருந்தான்.
நல்ல திடகாத்திரமான வாலிபன். நீண்டகால்களும் அதற்கிணையாக உறுதியான தோள்களுடன் கூடிய நீண்ட கைகள். பரந்த மார்பு. பெண்ணின் சாயல்கொண்ட வட்ட முகம், எடுப்பான மூக்கு, உதட்டின்மேல் அரும்பிநிற்கும் மெல்லிய மீசை.. நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
'மன்னிக்க வேண்டும் பெர்னார். உனக்கு நான் இடையூறு செய்கின்றேனோ ?
'அப்படியெல்லாம் இல்லை. கப்பித்தேன். உட்காருங்கள். காற்றின் நிலை சீராகியுள்ளதா ?
'அந்த மகிழ்ச்சியிற்தான் உதவி கப்பித்தேனிடம் கப்பலை நடத்துமாறு பணித்துவிட்டு, நான் கீழே இறங்கிவந்துள்ளேன். காற்றின் நிலை இவ்வாறே நீடிக்குமாயின் அடுத்த கிழமை புதுச்சேரியில் இருக்கலாம். கிழக்குக் கடற்கரையில் இந்திய விலைமகளிருடன் சாராயம் குடித்து மகிழலாம். '
'கப்பித்தேன்; உனக்கு எப்போதும் மதுவும் மங்கையும் பற்றிய கவலைதானா ? பிரெஞ்சுத் தீவில் கிறேயொல் பெண்களை அனுபவித்தது போதாதா ? '
' நீயும் இந்தியாவில் இருந்து வந்தவன்தானே ? அங்குள்ள பண்டிதர்களைக்கேள். பெண்களின் வகைகளையும் அவர்கள் தரும் இன்பங்களையும், அவர்களை அனுபவிக்கும் நுட்பங்களையும் சொல்லித் தருவார்கள். இனிமேலாகிலும் தெரிந்துகொள். தெரியாதென்றால் என்னுடன் வா நான் அழைத்துப் போகிறேன். '
' கப்பித்தேன் எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்.. இது கொஞ்சம் ரகசியமான காரியம். இயலுமா ? '
' நான் ஏதோ பிரெஞ்சுத் தீவுக்குக் கைவினைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல வேண்டி கவர்னர் லாபூர்தொனேயின் கடிதத்துடன் பிரெஞ்சு நிர்வாகத்தை விண்ணபிக்க வந்துள்ளதாகத்தானே நினைத்தேன் '.
'ஆம். நான் மறுக்கவில்லை. அது தவிர வேறு சில காரியங்களும் எனக்கு ஆகவேண்டியிருக்கிறது
' நீயும் புதுச்சேரியில் இருந்தவனாயிற்றே. கவர்னருக்கும் அவரது மதாமுக்கும் வேண்டியனாயிற்றே, உன்னால் முடியாததா ? '
' உண்மை. ஆனால் இது கவர்னருக்குத் தெரியாமலும், அவர் பக்கத்திலிருக்கும், துபாஷ்களுக்கும், குறிப்பாக உயர்ஜாதி இந்துக்களுக்கும் தெரியாமல் செய்யப்படவேண்டிய காரியம். '
'ஜாக்கிரதை. எதுவென்றாலும் யோசித்துச் செய். ஜாதி இந்துக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உள் விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது. நம்முடைய கலாச்சாரத்துக்கு முற்றிலும் முரண்பட்டவர்கள். எதையாவது செய்துவிட்டு ஆபத்தை விலைக்கு வாங்காதே! '
அதற்கடுத்த ஒரு கிழமையில் 'லெ போந்திஷேரி ' ' கடற்கரைக்கு மூன்றுகல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு காத்திருக்க, சரக்குகளை இறக்குவதற்காக குவர்னர் நிர்வாக உத்தரவின் பேரில் வந்திருந்த ஷெலாங்குகள் (பெரியபடகுகள்) சூழ்ந்து கொண்டன.
கப்பித்தென் தலாமேரும் பிரான்சுவாவும் ஒரு பிரத்தியேகப் படகில் ஏறி கடற்கரை அடைந்தனர். கெளபீனத்துடன் நின்றுகொண்டிருந்த மீனவப் பிள்ளைகளை புதுச்சேரி அரசாங்கச் சேவகர்களிருவர் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களை வறவேற்பதற்காக குவர்னர்ருக்கு மிகவும் வேண்டிய இரண்டாம் மட்ட அதிகாரி பிரான்சுவா ரெமி வந்திருந்தான்.. நான்கு ஆண்டுகளுக்குமுன் பெர்னார் புதுச்சேரியில் இருந்தகாலத்தில் இருவரும் பிரச்சினைப்பட்டு குவர்னர் தலையிட வேண்டியிருந்தது. பிரான்சுவாத் தன்னைப் புதுச்சேரி உருவாகக் காரணமாகவிருந்த பிரான்சுவா மர்த்தேனின் உறவினன், எனச் சொல்லிக் கொள்பவன். கப்பல் மத்தலோக்களை எதிர்பார்த்து, வெற்றிலையால் சிவந்த அதரங்களும், மைவழியும் கண்களுமாக, கடற்காற்றின் அலைக்கழிப்பில் விலகும் சேலையில், தளர்ந்த தனங்களுடன் காத்திருக்கும் விலைபோகா விலைமாதர்கள், அவர்களுக்குத் துணையாக வெற்றிலைச் செல்லத்துடன் இரண்டும் கெட்டான் மனிதர்களெனப் புதுச்சேரி கடற்கரை. கப்பித்தேன் தெலாமரும், பெர்னாரும் பிரான்சுவாவை நோக்கிச் சென்றார்கள். கை கொடுத்து வரவேற்ற பிரான்சுவா இருவரையும் பிரெஞ்சு முறைப்படி தழுவி வரவேற்றான். கப்பித்தேன் தன்னிடமிருந்த பயணம் மற்றும் கப்பற் தொடர்பான ஆவனங்களைப்
பிரான்சுவாவிடம் காண்பிக்க, அவன் அதனை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அவனிடமே திருப்பிக் கொடுத்தான்.
'கப்பித்தேன் உங்களுக்கு கோர்னர் மாளிகைக்குப் பக்கத்திலேயே வழக்கம்போல ஏற்பாடு செய்துள்ளது. குளித்துவிட்டு ஓய்வெடுங்கள். இரவு எழுமணிக்கெல்லாம் டினே( இரவு சாப்பாடு) தயாராகிவிடும். கோழியுடன், ஆற்று மீன்களும் ரொட்டியும், நீங்கள் விரும்பிக் குடிக்கும் உள்ளூர்ச் சாராயமும் உள்ளன. '
' பெண்கள் ? '
'அவ்ர்கள் இல்லாமலா ? எனக் கண்ணடித்த பிரான்சுவா, பெர்னாரை பார்த்தான். '
'மன்னிக்கவும் பெர்னார். உனக்கும் சகல ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன. நீ ஏற்கனவே தங்கியிருந்த வீட்டையே ஒழுங்கு செய்துள்ளோம்.. நாளை காலை குவெர்னரைச் சந்திக்கலாம். ' என்றவன், அங்கிருந்த இந்தியச் சேவகனைப் பார்த்தான். அதனை எதிர்பார்த்ததுபோல அவன் இவர்கள் அருலில்வந்து பயபக்தியுடன் நின்றான் '
' என்ன சொன்னதெல்லாம் ஞாபகத்தில்ருக்கிறதா ? ஐயா புதுச்சேரியில் தங்கும்வரை அவரது அனைத்து நலன்களையும் நீதான் கவனித்துக் கொள்ளவேண்டும். புரிந்ததா '
'உத்தரவு ஐயா! ' என்றவன் பதிலில் விஷமமிருந்தது.


தொடரும்.....
------------------------------------------------------------------------------------------------
1.De Saint-Malo j 'avons parti
Sur une frளூgate bien jolie
Pour s 'en aller dedan La Manche
Dedam la Manche vers Bristol
Pour aller attaquer Les Anglais
2. பாதுகாப்புப் பணியைச் செய்யும் மரக்கலங்கள்;


nakrish2003@yahoo.fr